Thursday, July 17, 2014

அம்மாவின் கடிதம்

அன்புள்ள ஜெ,
என் அம்மா ஒருமாதம் முன்பு ‘பனிமனிதன்’ வாசித்தார். அதைப் பற்றி அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தோம். அவர் வயது 63. தன் 6 மாத பேரனை ‘கிம்சுங்’ என்று ஒருமுறை பெயர் போட்டுக் கொஞ்சினார். ‘நீ உன் வாசிப்பனுபவத்தை அவருக்கு எழுதலாம்’ என்று கூறினேன். இதற்கு முன்பு, நான் மூன்று மாதம் வெளிநாடு சென்றுவிட, எனக்கு Sweet surprise ஆக என் மனைவி ‘பனிமனிதன்’ புத்தகம் வரவழைத்து வாசித்துவிட்டு ‘ஏங்க! ஜெயமோகனுக்கு புத்தர் ரொம்ப புடிக்குமா? சொல்லுங்க சீக்கிரம்’ என்று என்னை பயங்கரமாகத் திகைக்க வைத்தாள். சட்டென்று ‘ஜெயமோகன்’ என் குடும்பத்தில் அனைவரும் உச்சரிக்கும் பெயர் ஆகிவிட்டது.
அம்மா தாளில் எழுதியதை டைப் செய்து கீழே தந்துள்ளேன்…..
அன்பார்ந்த ஜெயமோகனுக்கு,
ஜெயலட்சுமி எழுதுவது. நான் உங்கள் நாவலான ‘பனி மனிதன்’ கதை படித்தேன். எளிமையான நடையும் அதில் உள்ள கருத்துக்களும் மனதை கவர்ந்தன. அதில் வரும் ‘கிம்சுங்’ பாத்திரமாக மனிதர்கள் இருப்பது கோடியில் ஒருவர்தான் உள்ளனர். நீங்கள் எழுதிய ‘பனிமனிதன்’ கதையைப் படித்தபோது நானும் என் மகன் இளையராஜாவும், அக்கா மகன் சரவணனும் சேர்ந்து மணாலி சென்ற ஞாபகம்தான் வந்தது. பனியில் மனிதனின் வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதைத் தெரிந்து கொண்டேன். கடினமாக உழைப்பவர்களுக்குப் பனிமனிதன் வழிகாட்டுவது போல் என் வாழ்க்கையிலும் கடவுள் வழி காட்டினார். நல்லவர்களுக்கு எப்பொழுதும் கற்பனைப் பனிமனிதனின் அருள் உண்மையான வாழ்க்கையிலும் உண்டு.
பிரியமுடன்,
S Jayalakshmi.
இந்நிகழ்வுகள், அவற்றின் இடைவெளிகளில் உள்ள மெல்லிய கவித்துவம் மற்றும் இலக்கியம், அதன் மீட்சி பற்றிய யோசனையில்……..
நன்றியுடன்,
ராஜா.

No comments:

Post a Comment