Thursday, July 17, 2014

விஷ்ணுபிரகாஷ் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கடந்த 8 மாதங்களுக்குமுன் தற்செயலாக உங்கள் நவீன தமிழிலக்கியம் ஓர் அறிமுகம் என்ற நூலை வாசித்தேன். அதிலிருந்த ஒரு ஈர்ப்பு என்னை மேலும் வாசிக்க தூண்டியது. அதன் பின் உங்கள் இணையதளத்தில் இருக்கும் ஏராளமான கட்டுரைகளை வாசித்துள்ளேன். குறுநாவல்கள், பின்தொடரும் நிழலின் குரல், காடு, இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், விஷ்ணுபுரம், இன்றைய காந்தி என என் கனவும் உலகமும் கண்முன்னே விரிந்து செல்கின்றன. என் 25 வருட வாழ்க்கையின் அலுப்பிலிருந்து மீண்டு புதிதாக பிறந்த தருணங்கள். என்னை உடைத்து சிதறடித்த தருணங்கள். பின்னர் திரும்பி பார்க்கையில் தெரிகிறது உங்கள் பனிமனிதனை தினமணி சிறுவர் மணியில் என் குழந்தை பருவத்தில் வாசித்திருக்கிறேன் என்பது. நிறைய உங்களுக்கு எழுதவேண்டும் என்று தோன்றியிருக்கிறது ஆனாலும் என்னால் எழுத இயலவில்லை. வெள்ளை யானையை வாசிக்க வேண்டும்.
வணக்கத்துடன்
விஷ்ணுபிரகாஷ்
அன்புள்ள விஷ்ணுபிரகாஷ்
வாசகர்களில் பலருக்கு என்னுடைய பெயர் அறிமுகமாவதற்கு முன்னரே என்னுடைய எழுத்துவகையை அறிமுகம் செய்வதாக பனிமனிதன் இருந்திருக்கிறது. பனிமனிதன் கனவும் தத்துவசிந்தனையும் கதையொழுங்கும் கொண்ட படைப்பு. அவை மூன்றும்தான் என்னுடைய எழுத்தின் தனித்தன்மைகள் என நான் நினைக்கிறேன்
வெள்ளையானையை வாசித்துவிட்டு எழுதுங்கள்
ஜெ

No comments:

Post a Comment