Thursday, July 17, 2014

பனிமனிதனும் ஹாரிபோட்டரும் -ஜீவா

ஒரு மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளன்தான் அங்குள்ள குழந்தைகளுக்காக எழுதவேண்டும் என்று கூறப்படுவதுண்டு . தமிழில் முக்கியமான எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே குழந்தைகளுக்காக எழுதியதில்லை . அதற்கு அவர்களுடைய எழுத்து முறை ஒத்துவந்ததில்லை . இங்கு பெரியவர்களுக்காக எழுதி தோற்றுப்போன எழுத்தாளர்களும் துணுக்கெழுத்தாளர்களும்தான் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்கள் .


இத்தகைய எழுத்தில் ஏற்கனவே குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட கதைகளே மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருப்பதை காணலாம் .ராஜாராணி கதைகள் , மந்திரஜாலக் கதைகள் , சாகசக்கதைகள் போன்றவை . குழந்தைகளுக்காக எழுதும்போது அவர்களுக்கு நற்செய்திகள் ,நீதிகள் சொல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இக்கதைகளில் உள்ளது .


கண்டிப்பாக குழந்தைகளுக்கான கதைகளில் நற்செய்திகள் தேவைதான் . நம் சமூகத்தின் அறங்களைத்தான் அவர்களுக்கு நாம் அளிக்கவேண்டும் . ஆனால் குழ்ந்தைகள் புதிய தகவல்களுக்காக ஏங்குகிறார்கள் . தாங்கள் வாழும் சூழலை தாண்டி செல்ல அவர்கள் மனம் துடிக்கிறது . ஆகவே புதிய நிலப்பரப்புகளைபற்றிய விவரணைகள் அவர்களுக்கு தொடர்ந்து தேவையாகின்றன.


இதையெல்லாம் நமது குழந்தை நூல்கள் சற்றும் பொருட்படுத்துவதேயில்லை . குழந்தைகளுக்காக எழுதுபவன் ஆராய்ச்சிகள் செய்து எழுதவேண்டும் என்று நம்முடைய குழந்தைஎழுத்தாளர்களிடம் சொன்னால் சிரிப்பார்கள். அத்துடன் நடை என்பது ஒரு கைபழக்கம் அல்ல , அதை நல்ல எழுத்தாளன் எப்படியும் கட்டுப்படுத்தலாம் என்று சொன்னாலும் அவர்களுக்கு புரியாது .இதனால்தான் நமது குழந்தைகள் இளமைப்பருவத்தில் காமிக்ஸ்கள் படிக்க ஆரம்பிக்கின்றன.நமது இளமை நினைவுகளில் முத்து காமிக்ஸும் , இரும்புக்கை மாயாவியும்தான் நினைவாக நிற்பார்களேயொழிய வாண்டுமாமாவோ .சின்னஞ்சிறு கோபுவோ , கல்வி கோபாலகிருஷ்ணனோ அல்ல .


நமது குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் ஏராளமாக உள்ளது .இப்போது தமிழின் ஆறு நாளிதழ்கள் குழந்தை இதழ்களை இணைப்பாக அளிக்கிறார்கள் . இவை மொத்தமாக 10 லட்சம் பிரதி வரும் .இது தமிழின் எந்த இலக்கியச் சூழலையும் விட பெரியது .ஆனால் இவ்விதழ்கள் தொடர்ந்து அந்நாளிதழ்களில் வேலைபார்க்கும் உதவி ஆசிரியர்களால் இஷ்டத்துக்கு எழுதி நிரப்பபடுகின்றன. ஒரு நல்ல எழுத்தளர்கூட இவற்றிலிருந்து உருவாகி வரவில்லை .இந்த தேவையை இங்கு எவருமே உணர்ந்ததாகவும் தெரியவில்லை .தினமணியின் சிறுவர் மணி சிறிதுகாலம் பொறுப்புணர்வுடன் வெளிவந்து இப்போது பழையபடி ஆகிவிட்டது .


கி ராஜநாராயணன் எழுதிய ‘பிஞ்சுகள் ‘ என்ற சிறு நாவல்தான் தமிழில் தீவிர இலக்கியவாதிகளால் எழுதப்பட்ட முதல் குழந்தை இலக்கியம் ஆகும் .அது ஒரு சிறந்த படைப்பும்கூட . அதன் பிறகு குறிப்பிடத்தக்க முக்கியமான நூல் ஜெயமோகன் எழுதிய ‘பனிமனிதன் ‘ . இது தினமணி தமிழ் மணி இதழில் 44 வாரங்கள் தொடராக வெளிவந்தது . இப்போது நூலாக வெளிவந்துள்ளது . இது தொடராக வெளிவந்தபோது வழக்கமான சிறுவர்கதைகளுக்கு பழகியவர்கள் இது சற்று சிரமம் தருவதாக இருப்பதாக சொன்னார்கள் . ஆனால் சில வாரங்களுக்குள்ளேயே மிகப்பரவலான வாசிப்பை பெற்று பிரபலமாகியது இது .
200 பக்கம் கொண்ட இந்த நாவல் குழந்தையிலக்கியம் என்று பார்க்கும்போது பெரியதுதான் . எந்த நல்ல குழந்தை இலக்கியத்தையும்போலவே இதுவும் பெரியவர்கள் , தேர்ந்த இலக்கியவாசகர்கள் , விரும்பி வாசிக்கக்கூடியதாக உள்ளது . குழந்தைகளுக்குரிய எளிமையான சாகச உலகத்துக்கு அடியிலே மிக முக்கியமான தத்துவார்த்தமான தேடலும் , குறியீடுகள் மூலம் உருவாகும் கவிதையும் கொண்டது இது .


முக்கியமாக நம்மை கவர்வது ஜெயமோகன் இதற்கென செய்துள்ள கடுமையான உழைப்பு . மலைவாழ்க்கை , பரிணாமக் கொள்கையின் புதிய வளர்ச்சி , மானுடவியல் கொள்கைகள் போன்ற பல துறைகளில் விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது . இதற்கென நிலவியல் /மானுடவியல் ஆய்வாளர் டாக்டர் . சு. கி. ஜெயகரன் [மூதாதையரைதேடி என்ற பிரபல நூலின் ஆசிரியர் . க்ரியா வெளியீடு ] அவர்களின் உதவியை ஆசிரியர் நாடியுளதாக குறிப்பிடப்படுகிறது .


அத்துடன் இந்தக் கனமான விஷயங்களை மிக எளிமையான மொழியில் தெள்ளத்தெளிவாக சொல்வதில் ஜெயமோகன் வெற்றியடைந்துள்ளார் .சொற்றொடர்கள் பெரும்பாலும் பத்து வார்த்தைகளுக்குள் தெளிவான எழுவாய் பயனிலை அமைப்புடன் உள்ளன. ஆயிரம் தமிழ் சொற்களை அறிந்த ஒரு குழந்தை இதை படித்துவிட முடியும் .


கதைப்போக்கில் இந்திய நிலப்பகுதியின் நிலவியல் வரலாறும் , மனிதனின் பரிணாமவரலாறும் விரிவாக சொல்லப்படுகின்றன.இதற்காகவே குழந்தைக் கதைகளில் காணப்படும் எல்லாம் தெரிந்த கதாபாத்திரமாக டாக்டர் திவாகர் என்ற கதாபாத்திரம் வருகிறது . கதைக்குள் வர முடியாத தொடர்புள்ள தகவல்கள் எளிய மொழியில் தனி கட்டத்துக்குள் தரப்பட்டுள்ளன .இந்த உத்தி மிகவும் வெற்றிபெற்ற ஒன்று . அதில் அரிஸ்டாடில் ,காளிதாசன் ,ஃப்ராய்ட் ,சி .ஜி .யுங் ,ழாக் லக்கான் என பல சிந்தனையாளர்களின் கருத்துக்கள் வருகின்றன. கட்டைவிரலுக்கு மனித வரலாற்றில் உள்ள இடம் முதல் மெக்ஸிகோவின் தங்கம் எப்படி உலகத்தை மாற்றியது , எப்படி சுற்றுச் சூழல் அழிவால் மெசபடோமியா அழிந்தது என்பது வரை எளிமையாக பேசப்படுகின்றன .


இமய மலைகளில் இருப்பதாக நம்பப்படும் ‘யதி ‘ என்ற பனிமனிதனைப் பற்றி ஏராளமான கதைகள் உள்ளன. ஜெயமோகன் அக்கதையை புதிய கோணத்தில் வளர்த்தெடுக்கிறார் . பனி மனிதனை தேடி இமயமலையின் மீது ஏறிப்போகும் சாகசக் கதையாக இது ஒரு கோணத்தில் உள்ளது . கதை முதிரும்போது பனிமனிதன் இந்திய மனித குலத்தின் குரங்கு மூதாதையான ராமபிதாக்கஸ் என்ற குரங்கு மனிதனில் இருந்து பிரிந்து முற்றிலும் வேறு வகையில் பரிணாமம் அடைந்த ஒரு இனம் என்று தெரிகிறது . மனிதனாக பரிணாமம் அடைந்த கிளை பேராசையும் , போர்வெறியும் கொண்டு உலகை சூறையாடும்போது வேறு ஒரு விதமான வளர்ச்சியை கொண்டவர்களாக பனிமனிதர்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கு மனம் தனித்தனியாக இல்லை .எனவே மொழி இல்லை . அகங்காரம் இல்லை.ஆகவே ஆசையும் போராட்டமும் இல்லை.


பண்டைய கோயில் கோபுரங்களில் நவதானியங்கள் உலரவைக்கப்பட்டு கும்பங்களில் சேமிக்கப்படும். பிரளயம் ஏற்பட்டு எல்லாம் அழிந்தால் புதிய மண்ணில் விதைக்க விதை இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக . பேராசையால் போரிடும் மானுட இனம் அழிந்தால் புதிய மானுட இனம் உருவாவதற்காக சேமிக்கப்பட்ட விதை நெற்கள் பனிமனிதர்கள் எந்று சொல்லி நாவல் முடிகிறது .


இதன் கதைப்போக்கிலே மிக எளிமையாகச் சொல்லப்படும் மலைக்காட்சி வர்ணனைகள் அற்புதமானவை! ‘ மேகங்கள் இடைவெளி விட்டு சூரியனின் ஒளிக்கதிர்கள் வந்தன.அவை பனிப்பாளம் மீது விழுந்தன.கண்ணாடி அறைக்குள் விளக்கை வைத்தால் எப்படி இருக்கும் ? அதுபோல இருந்தது அக்காட்சி .நான்கு திசைகளிலும் பனிப்பாறைகள் ஒளி பெற்றன. ‘ஓர் இலக்கிய வாசகனுக்கு ஆழமான தத்துவ உருவகங்களாக ஆகும் நிகழ்ச்சிகளை ஏராளமாக இந்நாவலில் காணலாம்


எனிட் பிளைட்டன் நாவல்கள் , ஹாரி போட்டர் வரிசை போன்ற புகழ் பெற்ற குழந்தை எழுத்துக்கள் குழந்தைகளுக்குள் உள்ள கற்பனைத்திறனையும் சாகச உணர்வையும் மட்டுமே தூண்டிவிடுகின்றன . மேலும் இந்நாவல்களில் மிக முக்கியமான ஒரு அம்சமாக உள்ளது மேற்கத்திய வாழ்க்கைப்பார்வை . ட் ரஷர் ஐலண்ட் இதற்கு முக்கியமான உதாரணம் . புதிய உலகங்களுக்குச் சென்று , அவற்றை வென்று கைப்பற்றி , ஆள்வதும் பயன்படுத்துவதும் இக்கதைகளின் முக்கியமான கதைக்கருவாகும்.இது ஒரு புரதனமான ஐரோப்பிய மனநிலை ஆகும் . அத்துடன் கரியவர்களோ , குள்ளமானவர்களோ ஆன வேறு நிலப்பகுதி மக்களுக்கு தலைவர்களாகவும் ரட்சகர்களாகவும் ஆகும் ஃபாண்டம் , டார்ஜான் போன்ற கதாபாத்திரங்களுக்குள் வெள்ளைய இனமேன்மைவாதம் உள்ளே ஒளிந்துள்ளது .


நம்முடைய குழந்தை நாவல்களுக்குள் நம்முடைய மரபின் சாரமான விஷயங்கள் அடங்கியிருக்க வேண்டும் . நம்முடைய மரபு பல்வேறுபட்டது என்றாலும் அதன் மைய ஓட்டமாக சில விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக மேற்கத்திய மரபு மனிதனை மையமாக கொண்டு இயற்கையையும் பிரபஞ்சத்தையும் அவனை சுற்றியுள்ளவையாக காட்டுகிறது . மனிதனால் அறியப்படும் பொருட்டும் , வென்று பயன்படுத்தும் பொருட்டும் தான் அவை உள்ளன. மனிதனே பிரபஞ்சத்தின் அரசன் . மனித அறிவேரெளலகின் முக்கியமான அம்சம் . மேற்கே அதை மேம்மன் வழிபாடு என்றும் சோபியாவழிபாடு என்றும் சொல்கிறார்கள். அதைத்தான் அங்குள்ள காமிக்ஸ் களும் வெளிப்படுத்துகின்றன. நேர்மாறாக நம்முடைய புராண மரபிலும் சரி , நாட்டுப்புற மரபிலும் சரி மனிதன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமேயாகும் . கருணை வடிவமாக தியானத்திலிருக்கும் புத்தரே நம்முடைய மனதிலாழமாக பதிந்துள்ள சிலை .


அதைப்போல நம்முடைய குழந்தை கதைகளுக்குள் நமது தேசிய /கலாச்சாரப் பெருமிதங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் . அவை நமக்கு தன்னம்பிக்கை அளிப்பவை . பெரியவர்களுக்கான இலக்கியங்களில் அது எப்படியிருக்கவேண்டுமென்பது வேறு விஷயம் . இன ,நிற மேலாதிக்கத்தை நம் குழந்தைகள் மனதில் மேலைநாட்டு காமிக்ஸ் கள் ஊட்ட நாம் அனுமதிக்ககூடாது . அத்துடன் நம்முடைய குழந்தையிலக்கியங்களில் கண்டிப்பாக ஒரு இலட்சியவாத அம்சமும் இருந்தாக வேண்டும் . பெரிய கனவுகளையும் கருணையையும் அவை உருவாக்க வேண்டும் .வெறும் வீர சாகசங்களாக மட்டும் அவை இருக்கக் கூடாது .


இந்தக் கோணத்தில் பார்த்தால் பனிமனிதன் மிக முக்கியமான ஒரு முன்னோடி ஆக்கம் என்றே சொல்வேன் . நவீன அறிவியல் பற்றி பேசுகையில்கூட அது இந்தியாவின் பெருமைமிக்க மரபுகளைப் பற்றியும் பேசுகிறது . நாவல் சொல்லும் சாரமான உண்மை நம் மரபிலிருந்து வந்ததாகும் . பெரும் செல்வக் குவியல்களை கண்டபிறகு அவற்றை நிராகரித்து இயற்கையைப்பற்றிய ஆழமான ரகசியத்தை மட்டுமே உள்வாங்கிக் கொண்டு அதன் கதாபாத்திரங்கள் திரும்பி விடுகின்றன. இயற்கையுடன் இசைவுள்ள ஒரு வாழ்க்கையை அது பேசுகிறது .மனிதகுலத்தையே தழுவியதாக ஒரு கருணைமிகுந்த பெரும் கனவை முன்வைக்கிறது . கண்டிப்பாக நம் குழந்தைகள் படிக்கவேண்டியது ஹாரிபோட்டர் அல்ல , பனிமனிதன்தான் . ஹாரிபோட்டரை விட எல்லா வகையிலும் சுவாரஸியமூட்டும் ஆக்கம்தான் பனிமனிதன்.


ஆனால் சென்னையில் ஒரு கடையிலேயே 1500 பிரதிகள் ஹாரிபோட்டர் விற்றது . பனிமனிதனுக்கு இதுவரை இங்குள்ள எந்த இதழிலும் ஒரு மதிப்புரை கூட வரவில்லை . இது நம் கலாச்சரம் போகும் திசையை காட்டுகிறது . இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் மேலைநாட்டுக் குழந்தைகள் மிக விரும்பி படிக்குமோ என்னவோ .
**
[பனி மனிதன் . பக்கம் 240 .விலை ரூ90 . கவிதா பப்ளிகேஷன்ஸ் .8, மாசிலாமணி சாலை ,தி. நகர் , சென்னை 600017 இந்தியா

No comments:

Post a Comment