Thursday, July 17, 2014

ரெங்கசுப்ரமணி விமர்சனம்

பனிமனிதன் - ஜெயமோகன்


புத்தகம் படிக்கும் வழக்கம் எப்படி ஆரம்பித்தது என்று யோசித்து பார்த்தால், தினமலர் சிறுவர்மலல் ஆரம்பித்தது. பலமுக மன்னன் ஜோ, சோனி பையன், லக்கி (மறந்துவிட்டது, படம் வரைந்தால் அது நிஜமாக மாறும்), ஜாக்பாட் ஜாக்கி, இன்னும் பல கேரக்டர்கள். பின்னால் காமிக்ஸ், கோகுலம், அம்புலிமாமா, பூந்தளிர் என்று முன்னேற்றம்.

இருபது வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட அப்புத்தகங்கள், கேரெக்டர்கள் எல்லாம் இப்போது மறைந்து வருவதைக் கண்டு வருத்தமாக உள்ளது. என் குழந்தைகள் எதைப் படிக்கும் என்று வருத்தம் ஏற்படுகின்றது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் இன்னும் வருகின்றனவா என்று தெரியவில்லை.

நன்றாக மீண்டும் யோசித்துப் பார்த்தால் புத்தகங்கள் மேல் ஒரு ஆர்வம வர மற்றும் ஒரு முக்கிய காரணம், சிறு வயது முதல் கேட்ட கதைகள். பக்கத்து வீட்டு பாட்டி சொன்ன கதைகள், துருவன் கதை, குசேலன் கதை, தியாகராஜர் கதை, ராமதாசர் கதை, பாரதக் கதைகள். சிறுவயதில் கேட்ட அக்கதைகள் தான் பின்னால் புத்தகங்கள் படிக்க காரணம். கதைகள் கேட்க கேட்க கற்பனை உலகம் திறக்கின்றது.

பெரும்பாலான குழந்தைகள் கதைகள் முழுவது சாகசக் கதைகளாகத்தான் இருக்கின்றன. குழந்தைகளின் கற்பனைத்திறன் என்பது பெரியவர்களை விட கண்டிப்பாக அதிகம். அவர்களின் கற்பனை உலகில் எவ்வித தடைகளும் இல்லை, தர்க்க நியாயங்களும் இல்லை. எல்லையில்லாதது. பெரியவர்களின் கற்பனை அவர்களின் படிப்பு, அனுபவத்தால் குறைப்பட்டது. பஞ்சதந்திரக் கதைகள் போன்றவை சாகசத்துடன் ஒரு நீதியையும் குழந்தைகளுக்கு கற்பிக்கின்றது. தத்துவங்களை குழந்தைகள் மேல் திணிக்க முடியாது, அறிமுகப்படுத்தலாம்.


பனிமனிதன் சாகசம், நீதி, கற்பனை, தத்துவம் என்று அனைத்தையும் கலந்து குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதை. ஜெயமோகனின் மற்ற கதைகள் அனைத்தும் படு சீரியசானவை, பெரியவர்களுக்கானவை. அவரால் குழந்தைகளுக்கும் எழுத முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார். நல்ல கதை சொல்லி குழந்தைகளை கவர்ந்துவிடுவான்.

கதை அலங்காரச் சொற்களால் குழப்பாமல், சிறிய வரிகளில், சாதாரண வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ளது. ஜெயமோகன் அவரின் குழந்தைக்களுக்காக சொல்லப்பட்ட கதை, பின் மற்ற குழந்தைகளுக்காகவும் புத்தகமாக வந்துள்ளது. பெரியவர்களும் படிக்கலாம், தப்பில்லை. கொஞ்ச நேரம் குழந்தைகளானால் என்ன குறைந்து போகப் போகின்றது. எப்பொழுதும் சீரியசாக ஏதாவது படித்துக் கொண்டிருந்தால் கஷ்டம்தான்.

இதே பனிமனிதனை மையமாக கொண்டு ஒரு கதை படித்துள்ளேன், முழுக்கதை நினைவில்லை, இமயமலை, அங்குள்ள குகைகள், குகைக்குள்ளான நீர் வீழ்ச்சிகள், பனிமனிதன், வெந்நீர் ஊற்றுகள் எல்லாம் வரும். யார் எழுதியது, என்ன கதை என்று மறந்துவிட்டது. பல வருடங்களுக்கு முந்தையது.

இமயமலையில் இருக்கும் ராணுவ அதிகாரி பாண்டியனுக்கு ஒரு பொறுப்பு தரப்படுகின்றது. பனி மனிதனை கண்டு பிடிக்க வேண்டும். பாண்டியன் துணைக்கு ஒரு ஆராய்ச்சியாளரை கூட்டிக் கொண்டு  செல்கின்றான். வழியில்  மற்றுமொரு லடாக்கிய சிறுவனும் சேர்ந்து கொள்ள, கடைசியில் பனிமனிதனை காண்கின்றார்கள். பனிமனிதன் அவர்கள் வாழும் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றான், அங்கு பனிமனிதர்கள் ஒரு கூட்டமாக வாழ்கின்றார்கள். பாண்டியனும், டாக்டரும் அங்கு பல விநோதங்களைப் பார்க்கின்றனர். ஒரு கற்பனை உலகம். பிரிய மனமின்றி பிரிந்து வருகின்றனர்.

கதை முழுவது ஏகப்பட்ட தகவல்கள் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் எழுதியுள்ளார். அறிவியல் தகவல்கள், பனிமலையில் வாழ்பவர்களின் வாழ்க்கை முறை, புத்த மத தகவல்கள் என ஏராளம். அதற்காக கதை முழுவதும் அட்வைஸ் மழையுமல்ல, விறுவிறுப்பாகவும் உள்ளது. குழந்தைகளின் கற்பனைக்கேற்ப, வைரப்பாறை, வைர நதி, மரத்தில் மேயும் குதிரை,  பன்றி சைஸ் யானை (அவதார் வருவதற்கு முன்பே எழுதப்பட்டது), பறக்கும் மீன், நீந்தும் சிங்கம்.

படிக்க படிக்க அவ்வுலகத்தில் நுழைந்துவிட்டது போன்ற ஒரு பிரமை. மனதளவில் நானும் அவ்வுலகை சுற்றிப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அவதாரை 3டியில் பார்த்த போது ஏற்பட்ட ஒரு பிரமிப்பு மீண்டும். அவதாரை விட வலுவாக, அப்படம் காட்டுவதைத்தான் நான் பார்க்க முடியும், ஆனால இது என் சொந்த கற்பனை. குழந்தைகள் படிக்கும் போது அவர்களின் உலகில் இவ்வுலகம் மேலும் அவர்களின் கற்பனையால் வலுப்படுத்தப்படும்.

பனிமனிதர்கள் உலகத்தில் தீமையில்லை, பகையில்லை, ஆசையில்லை, அவர்களுக்கு என்று ஏதுமில்லை, மொழி இல்லை. அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றார்கள், பூச்சிகள் அனைத்தும் ஒரு தனி அலைவரிசையில் பேசிக்கொள்வதைப் போல, அவர்களின் தொடர்பு இருக்கின்றது.

கதையின் நடுவே பல ஆழமான உரையாடல்கள், புத்தமத தத்துவங்கள். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதன் விளக்கங்கள்.

யதிகள் என்பவர்கள் யார்?


//ஒரு பாத்திரத்தில் விதை தானியங்களை சேகரித்து வைத்து, அதை நன்றாக மூடி மலை மேல் வைத்து விடுவோம், ஏதாவது ஏற்பட்டு அனைத்தும் அழிந்தாலும், மீண்டும் அதை எடுத்து முதலில் இருந்து ஆரம்பிப்போம்//


அந்த விதை தானியங்களை போன்றவர்கள் யதிகள். உலகத்தின் தீமை அதிகமாகி போகும் போது, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க உதவப் போகின்றவர்கள் அவர்கள். எப்படியும் மனிதன் பூமியை நாசமாகத்தான் போகின்றான், யதிகள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். யதிகள் என்பது புத்த மதத்தின் ஒரு நம்பிகை என்று நினைக்கின்றேன்.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அன்பை போதிக்கும் அருமையான கதை          http://rengasubramani.blogspot.in/2013/02/blog-post_4.html   .  

No comments:

Post a Comment